search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு வங்கி"

    • இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
    • இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது.

    நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும். அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும்.

    அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது.

    எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

    இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார்.
    • போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மனைவி புஷ்பகலை (வயது 52). இவர் ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நகை மற்றும் தாயாரின் நகை, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் என மொத்தம் 90 பவுன் நகைகளை கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை லாக்கரில் வைத்து இருந்தார்.

    கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஆசிரியை 40 பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். மீதம் 50 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்து இருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந்தேதி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆசிரியையை தொடர்பு கொண்டனர். அப்போது உங்களது வங்கி லாக்கர் திறந்த நிலையில் உள்ளது. எனவே வங்கிக்கு வருமாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் நேற்று காலை வங்கிக்கு சென்று தனது லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார்.

    அப்போது அதில் 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் ஆசிரியை கேட்டார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    • துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார்.

    குரும்பூர்:

    குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    ரூ.25 கோடி மோசடி

    அப்போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இதுதொடர்பாக வங்கி செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் வங்கி தலைவர் தலைவர் முருகேசப்பாண்டியன் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செயலாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார்.

    துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் பத்திரகாளி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர் குற்றாலத்தில் சொகுசு பங்களா ஒன்றில் இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பாளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, அவர் கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.
    • ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    சேலம்:

    சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

    இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    இதையடுத்து அந்த போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே ஊரக வேளாண் விவசாயிகள் கூட்டுறவு சங்க லிமிடெட்டின் என்ற பெயரில் கிளை வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இங்கு கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர்.

    அப்போது வங்கி மேலாளர் விமல்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கியின் நாகக்கோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தா
    • திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட திருநந்திகரையில் ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகள் மற்றும் சுருளகோடு ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி காலையில் குலசேகரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நாகக்கோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். பின்னர் குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை பார்வையிட்டு அதனை சீரமைப்பது குறித்து பொதுப்பணிதுறை நீராதாரப்பிரிவு அலுவலர்களிடம் பேசினார்.

    தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட திருநந்திகரையில் ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் சூரியகோடு-திட்டவிளை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழ்விலவூர்கோணம் வேங்கோட்டு குளம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து பக்கச்சுவர் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். பிணந்தோட்டில் இ-சேவை மையத்தையும், மாஞ்சக்கோணத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில், மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், பொதுப்பணித்துறை உட் கோட்ட என்ஜினீயர் சுகந்தா, உதவி என்ஜினீயர் பிரவீணா, குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ஆர். ராஜா, திற்பரப்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ஜாண் எபனேசர், பொன்மனை பேரூர் தி.மு.க. செயலாளர் சாம் பென்னட் சதீஸ், மாவட்ட பிரதிநிதி பொன் ஜேம்ஸ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினித்ஜெரால்ட், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    ×